பிக் பிளாங்க் 5

 

நம் ரியாலிடியை எந்த அளவு விர்சுவலாக உணருகிறோம் என இன்னும்  ஆழம் பார்ப்போம். எதிரே ஒரு ப்ளேட் அறுசுவை உணவு  இருக்கிறது, அதன் வண்ணங்களை பார்க்கிறோம் , அதன் texture ஐ தொட்டு உணர்கிறோம், வாசனையை நுகர்கிறோம், வாயில் போட்டு சுவைக்கிறோம். இப்படி நம் அருகில் உள்ளவற்றை ஐம்புலனால் உணர்கிறோம். ஆனால் தூரத்தில் மலை உச்சியையும், நிலவையும் , விரிந்து பரந்த வண்ணமயமான உலகையும்  கண் எனும் புலன் மட்டுமே  காட்சிப் படுத்துகிறது. கண் இல்லாவிட்டால் நம் உலகம் இப்படி ஆழமாக அழகாக இருக்காது. ஆனால் கோடிக்கணக்கான  ஒளியாண்டுகள் தொலைவு வரை பரவி  நிற்கும் மிக பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை பற்றிய அறிவு நமக்கு அறிவியல் தான்  கற்பித்தது. நாம் அறியும் பிரபஞ்ச காட்சிகள் காமிராவில் எடுக்கப்பட்டது அல்ல. சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விண்ணில் இருந்து வரும் நுண்ணிய மின் காந்த அதிர்வுகளைக் கொண்டு சில கணக்கீடுகள் செய்து கணினியால் உருவாக்கப்படும் படங்கள் அவை. உண்மை காட்சி  அப்படி இருக்க வேண்டுமென்றில்லை. அறிவியலின் வசதிக்கேற்ப   கருவிகளின் தொழில் நுட்பத் திறனுக்கேற்ப  விண்வெளி பற்றிய நம் கருதல் மட்டுமே அது.

இவ்வளவு பெரும் தூரங்களை அளக்கும் போது மற்றோரு பிரச்சனை  நம் அண்மை ரியாலிடியில் வேறு வேறாகத்தோன்றும் காலமும் இடமும் தூர ரியாலிட்டியில் Time space  என்று இணைந்து விடுகிறது. அதாவது பல்லாயிரம் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள பிரபஞ்ச காட்சி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய காட்சி. அது இடத்தின் காட்சி மட்டுமல்ல, காலத்தின் காட்சி கூட. ஒளியின் வேகத்தில் பயணித்தால் கூட நாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பிரபஞ்ச காட்சியை காண முடியாது.காரணம் அவை ஒளியை விட வேகமாக நம்மை கடந்து சென்ற, ஒளி கூட அடையமுடியாத தூரத்தில் சென்று மறைந்தவை. ஒளியை விட வேகமானது உண்டா? உண்டு.நமக்கு தான்  ஒளி வேகம் மாறாதது.ஒரு காரிருட்டில் ஒரு டார்ச் அடித்து நடக்கும் போது அதன் வெளிச்சம் எப்படி ஒரு எல்லைக்குள்  மட்டும் இடத்தை காட்டுமோ அந்த அளவு தான் நாம் அறியும் பிரம்மாண்டமான பிரபஞ்சம் எனில் அறியாதது??... நம் உணர்வு எல்லைக்கு அப்பால் மேலும் கீழும் முன்னும் பின்னும் உள்ளவை எல்லாம் மறைவாக இருளில் இருக்கிறது.

ஆனால் வெளி என்பது இவ்வளவு பிரம்மாண்டமானதா? வெளி எதனால் ஆனது ?
கோள்கள்,நட்சத்திரங்கள், காலக்சிகள், மின் காந்த அலைகள், நுண் துகள்கள் என பொருட்கள் மற்றும் சக்தி நிறைந்திருக்கும், சக்தி வலைகளால் பின்னப்பட்ட fabric தான் வெளி. பொருட்கள் சக்தியாகவும், சக்தி பொருளாகவும் நிலை மாறக்கூடியது . ஒரு இடத்தில் சக்தி செறியும் போது அது பொருளாய் தோன்றுகிறது. ஒரு பொருள் ஒளி வேகத்தில் நகரும் போது சக்தியாகிறது. நாம்  பார்ப்பதாலேயே சக்தி பொருளாய் தோன்றுகிறது. நாம் பார்க்காவிட்டால் இந்த பூமி, சூரியன் எல்லாமே  பொருள் வடிவமின்றி அலைகளாக இருக்கும். க்வாண்டம் அறிவியல் அப்படித்தான் கூறுகிறது. புகழ் பெற்ற double slit சோதனை  நாம் கவனிக்கும் போது எலக்ட்ரான் பொருளாகவும். கவனிக்காத போது அலையாகவும் இருப்பதை உறுதிப் படுத்துகிறது. கவனிக்கும் செயலே அதனை ஒரு இடத்தில் உணரச் செய்வதும் , அதன் சுழல் திசையை நிர்ணயிப்பதும் என கூறுகிறது.


வெளி என்பது எவ்வளவு பெரிது? எவ்வளவு சிறிது? என எதை வைத்து நிர்ணயிப்பது ? ஒரு முழம் பூ .. ஒரு மீட்டர் துணி ,என நாம் நம்மைக் கொண்டே அளக்கிறோம். ஆயிரம் ஒளியாண்டு தூரம் என்பதில் ஆண்டு என்பது நம்மைச் சார்பாக கொண்ட அளவு. நாம் இருக்கும் பூமி சூரியனை ஒரு முறை சுற்றும் கால அளவு. ஆயிரம் ஒளியாண்டு தூரம் என்பது ஆயிரம் வருடம் ஒளி வேகத்தில் பயணித்தால் அடையும் தூரம். கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா அளவுகளும் இப்படி நம்மை சார்பாக கொண்டவை. நம் ஒரு நாள் என்பது ஈசல் பூச்சிக்கு ஒரு ஆயுள்.நாம் சராசரியாக 60 வருடம் எடுத்துக்கொள்ளும் வாழ்வை அவை ஒரு நாளில் வாழ்ந்து விடுகிறது. நாம் ஒரு பாக்டீரியா சைசில் இருந்தால் நமக்கு  எத்தனை சதுர அடி வீடு தேவை.நம் வீட்டு LED பல்ப் தான் அதன் சூரியன். நம் கண்ணுக்கு நம் அனுபவத்துக்கு அடையவே முடியாத மறைந்திருக்கும் பிரபஞ்சத்தை போல  நம் வீடும் காரும் , இன்டெர்நெட்டும் அதன் பிரபஞ்சத்தில் அணுக முடியாத மறைவான நிலையில் இருக்கும், அவற்றை பொறுத்த வரை அவை இல்லை. காரணம் இவை நமது அனுபவம் மட்டுமே.ஒரு பூனையின் பிரபஞ்சம் பூனையின் அனுபவம்.மில்கீ வே அதன் பிரபஞ்சத்தில் இல்லை. நாம் உணர்வது தான் நமது வெளி. வெளி சார்பானது. it is unreal.

ஒரு வேளை விண் வெளியில் ஒரு கருந்துளை  நம் சூரியனை,பூமியை விழுங்கி விடுவதாக கொள்வோம்.அப்போது  அருகில் உள்ள வெளி எல்லாவற்றையும் அது விழுங்கி சுவாக செய்து விடும் போது நாம் என்னாவோம். எதுவும் ஆகாது நம் மீது செயல்படும் அனைத்து விதிகளும் நம் வெளியிலும் செயல்படுவதுதால் நாம் சுருங்கி போவதை உணர மாட்டோம். ஆனால் தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு தான் அப்படி தோன்றும். ஒரு ஊசியின் முனையளவு இடத்தில் கூட பிரம்மாண்டமான வெளியும் எனர்ஜியும் இருக்கிறது . நாம் தன்னுணர்வு  மிக நுட்பமாகி அந்த வெளிக்குள் கவனிக்கத் தொடங்கும் போது அதில் நாம் சக்தி அலைகள் என நினைக்கும் அணு உட்பொருட்கள் கூட பிரம்மாண்ட பொருள் உருவம் பெற்று  காலக்சிகளாக  நட்ச்சத்திரங்களாக  தோற்றம் பெறும்..

பொருட்களாக  இருக்கும் நாம் நம் பூமியோடு சுழலும் வேகம் மணிக்கு 1674 கிலோமீட்டர்.இது நம் கணக்கு. ஆனால் பூமி இருக்கும் சூரிய மண்டலம் சுழல்கிறது,சூரிய மண்டலம் இருக்கும் மில்கி வே சுழல்கிறது . இதெல்லாம் சேர்ந்து நாம் வெளியில் பயணிக்கும் வேகம் பயங்கரம். ஒரு வேளை வேறொரு நிலையில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு  நம் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ என்றால் நாம் அவருக்கு ஒரு பொருளாக தெரிய மாட்டோம் ஒளியாகவே தெரிவோம்.

கருத்துகள்