கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 2)

கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 1) பதிவின் தொடர்ச்சி இது...... நேற்று ஆன்லைனில் கடவுள் வந்து போனதிலிருந்து மனதில் ஒரே குழப்பம். தேர்தலில் யார் ஜெயித்தால் என்ன தோத்தால் என்ன? பைசாவுக்கு பிரயோஜனமில்லாத கேள்வி கேட்டு கடவுளை கடுப்பேத்தியது தான் மிச்சம். இருக்கிற விலைவாசிக்கு பேசாமல் ஒரு பத்து கிலோ தங்கத்தை ஜிப் செய்து அனுப்ப சொல்லியிருக்கலாம். அதை வைத்து ஏதோ காலம் தள்ளலாம். ம்ஹூம் வேண்டாம் அதிலும் ரிஸ்க். முன்பு எவனோ ஒரு பேராசைக்காரன் கடவுளிடம் ஐம்பது கிலோ "தங்கம்" கேட்டு மாட்டிக்கொண்டான். வரமாகவோ சாபமாகவோ கிடைத்த தங்கம் என்ற பெயருள்ள அவளை வைத்து காலம் தள்ளுவதற்குள் அவனுக்கு நுரை தள்ளி விட்டது. அதிலும் இன்று கடவுளே கிஃப்டாக எது தந்தாலும் திறந்து பார்க்கக் கூடாது. கான்ஃபிக்கெர் வைரஸ் இருக்கலாம். ச்சே ஒண்னும் வேணாம். நல்லதா நாலு கேள்வி கேட்டு கடவுளை நல்லா புரிஞ்சு கொண்டாலே போதும். வெயிட் சாதிக்! கடவுளிடம் பேசும் போது எதையும் ப்ளான் பண்ணிபேசணும். இல்லாட்டா இப்படித்தான். ஒண்ணும் வேண்டாம் மண்ணும் வேணாம்னுட்டு சொன்னா கடவுள் இருக்கிற எல்லாத்தையும் பிடுங்கிட்டா என்ன செய்ய? அப்புறம் வேலையிழந்த அமெரிக்க கோபாலு கதி தான். எது டைப் செய்தாலும் ஸ்பெல்லிங் செக், கிராமர் செக், லாஜிக் செக் எல்லாம் செய்து விட்டு செய் - மனதின் எச்சரிக்கை குரல் மண்டையில் குட்டியது. கடவுள் வருவார் என இன்று முழுதும் கம்ப்யூட்டரை ஆஃப் செய்யவில்லை. மின்சார வாரியம் ஃபியூசை பிடுங்கிவிடக்கூடாதே கடவுளே! ஒரு ஐடியா! கடவுளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் என்ன? அதாங்க கண்ணை மூடி கடவுளே கடவுளே கடவுளே மூன்று முறை பிரார்தனை செய்து விட்டு கட் செய்து விட்டேன். "ப்ளிங்" என்று மெசெஞ்சரில் கடவுள் ஐகான் பச்சையாகியது. உடனே என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது. பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதும் மாணவன் விடைகளை மறந்தது போல் எனக்கு கேள்விகள் எல்லாம் மறந்து விட்டது. விரல்கள் அதுவாகவே எதாவது டைப் அடித்து கேள்வி கேட்க துடிப்பது போல் நடுங்கியது. "ஹ ஹாய்ய்ய் " என தொடங்கினேன். எக்ஸ்ட்ரா எழுத்துக்கள் விரல் நடுங்கியதால் ஏற்பட்டது. அபூ அஃப்சரின் பின்னூட்டத்திலிருந்து கொஞ்சம் தைரியம் பெற்றுக்கொண்டு "வணக்கம் கடவுளே! தயவு கூர்ந்து தங்கள் அருட்பார்வையை என் மீது பார்க்கவும்"-- (முதலில் இதற்கொரு குறுஞ்சொல் கண்டுபிடிக்க வேண்டும்.) என்று டைப் செய்து கடந்த பதிவில் சகோதரி ராஜேஸ்வரியின் பின்னூட்டத்தின் லிங்ககும் கடவுளுக்கு பார்வேர்ட் செய்தேன். "என்ன வேண்டும் கேள் மானிடா? என் அருள் பார்வை உனக்கு உண்டு, பயம் நீங்கி தெளிவடைவாய்." என்று இமைக்கும் இரு கண்களின் ஸ்மைலியை கடவுள் அனுப்பினார். பின் குறிப்பாக ராஜேஸ்வரியின் பின்னூட்டத்தில் காணப்பட்ட சிரிப்பில் தானே சற்று பயந்து போனதாக கடவுள் ஒப்புக்கொண்டிருந்தார். (சும்மா அதிருதில்லே) "நேற்று நான் கேட்ட கேள்வியில் தவறிருந்தால் மன்னிக்கவும். தாங்கள் அவசரமாக லாக் அவுட் செய்தது ஏனோ?" -இது நான். "பிழையான கேள்வி தான். அதனால் தான் இல்லீகல் ஆபரேசன் என்று தகவல் சொல்லி விட்டு என் கம்ப்யூட்டர் தானாகவே ஷட் டவுன் ஆகி விட்டது." "புரியும்படி சொல்லுங்கள் பிரபுவே ஸாரி கடவுளே" தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என நீ கேட்டு நானும் உண்மையான பதிலை சொன்னால் நீ சும்மா இருப்பாயா? அதை பதிவில் எழுதுவாய். அதைப் படித்து இப்போது சாணி வாரி எறியும் எல்லாக் கட்சிகளும் ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடும். எல்லோரும் ஒரே அணியில் இருந்தால் போட்டி எப்படி? தேர்தல் எப்படி நடக்கும்? அப்புறம் ஜெயிப்பது யார்? ---கடைசியில் என் வார்தை பொய் என்றாகி விடும் . எனவே தான் நான் பதில் சொல்வதற்குள் விபரீதம் உணர்ந்து கம்ப்யூட்டர் ஆஃப் ஆகி விட்டது. இனி இது போன்ற குருட்டுக் கேள்விகள் கேட்காமல் உருப்படியாக கேள்? "ஓ..அப்படியா விஷயம் எனக்கு இது எட்டவில்லயே! சாரி கடவுளே. என் முதல் கேள்வி கடவுள் உண்டு என்று ஒரு கோஸ்டியும் கடவுள் இல்லையென்று ஒரு கோஸ்டியும் உலகில் இருக்கிறதே? யார் சொல்வது சரி ?" "உண்டு என்று தீவிரமாக நம்புபவர்க்கு நான் உண்டு. அதே போல் இல்லை என்று சொல்பவர்களும் மதங்கள் எனக்கிட்ட முக மூடியை தான் இல்லை என்கிறார்கள். கடவுள் என்று என்னை அவர்கள் நம்பாவிட்டாலும் இயற்கை என்றோ சக்தி என்றோ பொருள் என்றோ எதாவது பெயரில் என்னை அறிவதால் எனக்கு இருவரையும் பிடிக்கும். ஆத்திகர்களை விட நாத்திகர்கள் தான் அதிகம் கடவுள் என்று உச்சரிக்கிறார்கள். என்னைப்பற்றி அதிகம் நினைக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா? ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகக் கூறிக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என அறிய முயலாது தன் விருப்பத்திற்கு கடவுளை உருவகப்படுத்தி கடவுள் பெயரை சொல்லி கொலை முதற்கொண்டு அக்கிரமங்கள் செய்வார்கள். இத்தகைய போலிகளைத் தான் நான் அடியோடு வெறுக்கிறேன். உண்மை - பொய் இரண்டும் ஒரு நாணயத்தில் இரு பக்கம் போல சேர்ந்தது தான் அறிவு. அறியப்படும் எந்த விஷயமும் உண்மையாக அல்லது பொய்யாக இருக்க சம வாய்ப்பு உள்ளது. அது அந்த விஷயத்தை பார்க்கும் கோணத்தைச் சார்ந்தது. மனதில் வைத்துக்கொள் அறிவு சார்பானது. "ஓ.. புரிகிறது தெய்வமே காஷ்மீரை இந்திய மேப்பில் பார்த்தால் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் மேப்பில் பார்த்தால் அது இந்தியாவில் இல்லை. இது போல் தான் இறைவன் சரிதானே? "சபாஷ் சரியாக சொன்னாய் இப்போது சொல் உன்னைப் பொருத்தவரை நான் இருக்கிறேனா இல்லையா?" தெளிவாக இருந்த நான் சொன்னேன் "கடவுளே !நீ உண்மையில் இல்லை என்று சொல்கிறேன். சரிதானே?" என்று கேட்டது தான் தாமதம் கடவுள் "ட்டுய்ங்"என்று ஆஃப் லைன் ஆகிவிட்டார். "ச்சை மீண்டும் தவறாக ஏதோ கேட்டுவிட்டேன் போலிருக்கு..கன்னத்தில் கை வைத்தபடி காத்திருக்கிறேன் 
(தொடரும்) 
கடவுளுடன் ஒரு சாட்டிங் : மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும்
 

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
"வணக்கம் கடவுளே! தயவு கூர்ந்து தங்கள் அருட்பார்வையை என் மீது பார்க்கவும்"-- (முதலில் இதற்கொரு குறுஞ்சொல் கண்டுபிடிக்க வேண்டும்.) என்று டைப் செய்து கடந்த பதிவில் சகோதரி ராஜேஸ்வரியின் பின்னூட்டத்தின் லிங்ககும் கடவுளுக்கு பார்வேர்ட் செய்தேன்.//

ஏன் இந்த விளையாட்டெல்லாம்..எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்..
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
பின் குறிப்பாக ராஜேஸ்வரியின் பின்னூட்டத்தில் காணப்பட்ட சிரிப்பில் தானே சற்று பயந்து போனதாக கடவுள் ஒப்புக்கொண்டிருந்தார். (சும்மா அதிருதில்லே)//


இது வேறயா..
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
ஓ.. புரிகிறது தெய்வமே காஷ்மீரை இந்திய மேப்பில் பார்த்தால் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் மேப்பில் பார்த்தால் அது இந்தியாவில் இல்லை. இது போல் தான் இறைவன் சரிதானே?//

ஸ்ஸ்ஸ்...தாங்க முடியலையே..
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
"ச்சை மீண்டும் தவறாக ஏதோ கேட்டுவிட்டேன் போலிருக்கு..கன்னத்தில் கை வைத்தபடி காத்திருக்கிறேன் //

ஆரியா..ஸாரி கடவுள் எப்போ வருவார்
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..visit http://moodupani.blogspot.com
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பட்டாம் பூச்சி விருதுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராஜேஸ்வரி.
"எல்லாப் புகழும் கடவுளுக்கே"
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
தாமதத்திற்கு சாரி

//அபூ அஃப்சரின் பின்னூட்டத்திலிருந்து கொஞ்சம் தைரியம் பெற்றுக்கொண்டு
/

ஆகா இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க‌
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
//தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என நீ கேட்டு நானும் உண்மையான பதிலை சொன்னால் நீ சும்மா இருப்பாயா? அதை பதிவில் எழுதுவாய். அதைப் படித்து இப்போது சாணி வாரி எறியும் எல்லாக் கட்சிகளும் ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடும். எல்லோரும் ஒரே அணியில் இருந்தால் போட்டி எப்படி? தேர்தல் எப்படி நடக்கும்? அப்புறம் ஜெயிப்பது யார்?//

சாதி பொறுமை மே 18 ம் தேதிக்கு மேலே கடவுளிடம் கேளுங்க சொல்லுவார் யார் ஜெயிச்சதுது ..... ஹி ஹி ஹி
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
//காஷ்மீரை இந்திய மேப்பில் பார்த்தால் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் மேப்பில் பார்த்தால் அது இந்தியாவில் இல்லை. இது போல் தான் இறைவன் சரிதானே?
///

கடவுளையே குழப்பும் இந்த வரியை ரசித்தேன்.. நல்லாயிருக்கு