சுத்தி சுத்தி வந்தீக

சின்ன வயதில் என் வீடு தான் எனக்கு உலகம். அப்பாவின் கையைப் பிடித்து தெருவுக்கு வரத்தொடங்கிய போது கடைகள், சாலை என என் உலகம் பெரிதாகி விட்டது. அப்போது இந்த கார்கள் எல்லாம் சின்னதாக சாலையில் ஒரு பக்கம் தோன்றி பெரிதாகி மீண்டும் சின்னதாக மறுபக்கம் எங்கே போகிறது என்று புரியாமலிருந்தது. இடத்தைப் பற்றிய என் கருத்துக்களில் அருகே உள்ள இடம் எனக்கு பெரிதாக தெளிவாக இருக்கும் ஆனால் எல்லைகள் எப்போதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. வானத்தை வெள்ளை பெயின்ட் அடித்த கூரையாகவே கருதியிருந்தேன். நட்சத்திரங்கள் கூரையிலுள்ள ஓட்டைகளாகவும், நிலவை பெரிய குண்டு பல்ப் என்பதாகவும் தான் எண்னியிருந்தேன்.

ஆறாம் வகுப்புக்கு மூன்று மைல் தூரமுள்ள ஸ்கூலுக்கு நடந்து போகும் போது என் உலகம் மேலும் பெரிதானது. இப்போது பயணம், தூரம் பற்றி தெரியவந்தது. ஸ்கூலுக்கு எவ்வளவு துரம் என்பதை வழியில் மின் கம்பங்களை எண்ணி தெரிந்து கொள்வேன். பின்னர் அடி, மைல், மீட்டர், கிலோ மீட்டர் எல்லாம் பள்ளியில் தெரிந்து கொண்டேன். பின்னாளில் வெளிநாடுகள் போன போதும் விமானப்பயணத்திலும், எனது பூமியறிவு மேலும் விஸ்தாரமானது. ஆனால் டெல்லிக்கு ட்ரெய்னில் போன போது தான் தூரத்திற்கும் நேரத்திற்குமுள்ள தொடார்பைப்  பற்றி புரிந்து கொண்டேன்.


எனது விஞ்ஞான அறிவு வளரும் தோறும் உலகைப் பற்றிய என் கருத்துக்கள் பல தலை கீழாகப் போனது. அதுவரை தட்டையாக இருந்த எனது பூமியை கலிலியோவா உருண்டையாக்கி விட்டுப் போய்விட்டார். அப்போதும் உருண்டையின் உள்ளேயா? வெளியேயா?, நடுவிலா? எனக் குழப்பம். ஒரு வழியாக உருண்டையின் வெளிப்புறம் தான் இருக்கிறோம் என கருத்தை திருத்திக்கொண்டாலும் மேலே இருக்கிறோமா? கீழேயா? பக்க வாட்டிலா? என புதிய கேள்விகள் முளைத்தது. ஒரு கேள்விக்கு விளக்கம் தெரிந்தால் உடனே இன்னொரு கேள்வி அந்த இடத்தில் வந்து விடுகிறது. எளிதாக இருந்த என் உலகம் இப்படி விரிந்து கொண்டும் குழப்பமாகவும் மாறிக்கொண்டிருந்தது. உருண்டையின் வெளிப்புறம் எல்லாப் பக்கத்திலும் மனிதர்கள் இருக்கிறர்கள் என்று அறிந்த போது, கீழே உள்ள மனிதர்கள் ஏன் விழாமல் இருக்கிறார்கள்? கட்டிடங்கள் ஏன் விழவில்லை. கடல் நீர் ஏன் கொட்டிப் போக வில்லை? -மீண்டும் கேள்விகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு தத்துவம் எல்லோரையும் பூமியோடு ஈர்த்து காப்பாற்றியது.

வானம் எங்கே இருக்கிறது? உருண்டையான் பூமிக்கு வெளியே எல்லாப் பக்கமும் வானம் தான். வானம் என்பது தனியாக இல்லை காற்று மண்டலம் தான். நீலத்துக்கு காரணம் ராமன் விளைவு. காற்று மண்டலத்தில் பல அடுக்குகள் இருக்கு அதில் ஒன்று ஓசோன் படலம்.அதற்கும் மனிதர்கள் காது குத்தி ஓட்டை போட்டு விட்டார்கள்.

பூமி அந்தரத்தில் நிற்கிறது என்றார்கள். அப்படியானால் பூமி ஒரு மாட்டின் கொம்பின் மீது இருப்பதாகவும் அது அவ்வப்போது பூமியை தன் இன்னொரு கொம்புக்கு மாற்றும் போது பூமி அதிர்ச்சி ஏற்படுவதாகவும் பாட்டி சொன்னது பொய்யா? மாடு அந்தரத்தில் நிற்குமானால் பூமி நிற்காதா? என் அறிவில் பாட்டிகள் வெற்றிலை குதப்பி துப்பிய இது போன்ற எல்லா கறைகளையும் விஞ்ஞான அறிவால் சுத்தப்படுத்திக் கொண்டேன். வானத்தில் பாம்பு இருப்பதாக பாட்டி சொன்னதை நம்பவில்லை. ருத்ரநாகம் படம் பார்த்த போது பாட்டி ஞாபகம் வந்தது.

என் அறிவில் பூமி சுழலத்தொடங்கியது. வான மங்கை உடை மாற்றுவதால் இரவு பகல் உண்டாவதில்லை என விளங்கியது. பூமி தன்னத்தானே ஒரு முறை சுற்றியதும் காலண்டரில் தாள் கிழிக்கிறோம். தங்கத்தால் செய்த தட்டு என அற்புதமாக நினைத்திருந்த சந்திரன் ஆம்ஸ்ட்ராங் கால் பட்டதும் பூமியின் உப கிரகமாகி விட்டது. அதில் ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டிருந்த கிழவி மண்டையைப் போட்டு விட்டாள். சந்திரன் தன்னையும் பூமியையும் சுற்றுவது தெரிந்து கொண்டேன்.

கடலில் பூமி மிதக்கிறது என நினைத்திருந்தேன. பூமியில் தான் கடல் இருக்கிறது. ஆனால் கண்டங்கள் நகருதாமே!, இமய மலையெல்லாம் அதனால் தான் உண்டானதாம். கடலுக்குள்ளேயும் விசித்திரமா என்னவெல்லாமோ இருக்கிறது . நான் என்ன சொல்ல போய் டிஸ்கவரியோ நேசனல் ஜியாக்ரபிக் சானலோ பாருங்கள்.

சூரியன் ஓர் எரியும் நட்சத்திரம்.சூரியன் பூமியை சுற்றவில்லை , பூமியும் அது போன்ற ஒன்பது கிரகங்களும் தான் சூரியனை சுற்றுகிறது. பூமி சூரியனை நீள் வட்டமா சுத்துது இதனால் தான் பருவகாலம் வருது. மழை பெய்யுது. ஒரு தடவை சுற்றியதும் ஹாப்பி நியூ இயர் என்று தண்ணியடித்து பட்டாசு கொழுத்துகிறார்கள். இந்த சூரியனும் தன்னைத்தான சுத்துது அதற்கு 11 வருசம் ஆகும். இது தான் சூரிய மண்டலம்.

இது போல் பல்லாயிரம் நட்சத்திர மண்டலங்கள் சேர்ந்து கேலக்ஸி எனப்படுகிறது. காலக்ஸிக்கு ஒரு மையம் உண்டு அதை சுற்றி எல்லா நட்சத்திரங்களும் சுற்றும். பழனியில் உள்ள மொட்டைகளில் ஒரு மொட்டையாக ஒரு ஓரத்தில் நம்ம சூரிய நட்சத்திரம் சுற்றுவது மில்கி வே என்ற காலக்ஸியில். இது போல் எண்ணிலடங்கா காலக்ஸிகள் இருக்கின்றன எல்லாம் அதற்கென்று உள்ள மையத்தை சுற்றுகிறது. அப்பா..எவ்வளவு பிரம்மாண்டம். என் தலையும் கூடவே சுற்றுது. வெளியே பசு மாடு ஹாயாக புல் தின்னுது. விஞ்ஞானம் தெரிந்ததால் நான் ஒனறுக்குள் ஒன்றாய் சுழலும் மிகப் பிரம்மாண்டமான ரங்க ராட்டினத்தில் மாட்டிக்கொண்டு பல்லாயிரம் மைல் வேகத்தில் விண் வெளியில் சுழற்றியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த நட்சத்திரங்களுக்கு பிறப்பு, மூப்பு ,சாக்காடு உண்டு. இப்போது நாம் வானத்தில் பார்க்கும் பல நட்சத்திரங்களின் ஒளி பல ஆயிரம ஒளி ஆண்டுகள் பயணித்து பூமியை அடைகிறது. நாம் இந்நேரம் பார்க்கும் பல வான்காட்சிகள் எப்போதோ அவிந்து போனது. நட்சத்திரங்களின் அந்த கால மலரும் நினைவை இப்ப தான் பார்கிறோம். பார்க்கும் பல நட்சத்திரங்கள் "இருக்குது ஆனால் இல்லை" தான். அருகே உள்ள நட்சத்திரங்களை மட்டுமல்ல அதன் ஓளியை கூட ஸ்வாகா பண்ணும் கருந்துளைகளும்,அதற்கு நேர் மாறாக எல்லாவற்றையும் பீச்சி அடிக்கும் வெண் துளைகளும் இன்னும் எவ்வளவோ சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். இதெல்லாம் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஒரு பலூன் போல விரிந்து கொண்டே செல்கிறது. அதன் புள்ளிகள் போல நட்சத்திரங்கள் நம்மை விட்டு வேகமாக விலகி செல்கிறது.

இந்த பதிவும் சரி பிரபஞ்ச பரப்பும் சரி இப்படி விரிஞ்சிகிட்டே போனா எப்படி? அதுக்கு ஒரு எல்லை உண்டா? இந்த பக்கம் இந்தியா அந்த பக்கம் பாகிஸ்தான்னு இருந்தா நடுவில ஒரு எல்லைக் கோடு போடலாம். ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்கு அப்படி ஒரு எல்லை இருந்தால் அந்த எல்லைக்கு அப்புறம் என்ன இருக்கு? எல்லாவற்றுக்கும் கட்டம் கட்டியே பழகிய நமக்கு எல்லாமுமா இருக்கிறதை புரிவது எப்படி? எல்லை இருக்கு ஆனா அதற்கப்புறம் என்னன்னு தெரியாது என்று தேடுகிறார்கள். அப்பவே சொன்னேனில்ல ஒரு மாட்டின் கொம்பில் தான் இந்த பிரபஞ்சம் நின்று சுழல்கிறது என்று பாட்டி மீண்டும் சொன்னது விஞ்ஞானத்தை விட நம்பும் படி தோன்றியது.

முடிவுரை என் கருத்து:
இதெல்லாம் மாயைங்க. அறிவால் வருகிற குழப்பம். உங்களுக்கே நீங்கள் அனுப்பும் இமெயிலானாலும் உலகம் பூரா சுற்றி வருதே இது விஞ்ஞானம். சென்னைக்கு புதியவர்களை ஆட்டோக்கரர்கள் அடுத்த தெரு செல்ல சென்ன முழுதும் சுற்றுவார்களே அது தான் விஞ்ஞானம். அறிவு வளர வளர புதிய குழப்பங்கள் தான் தோன்றுகிறது. சின்ன வயசில் அவ்வளவு கேள்விகள் இல்லை. இடம் என்பதே நம் கருத்தில் தான் உருவாகி்றது. இடம், தூரம் எல்லாம் நம்ம அறிவுக்கு தான். உண்மையில் எல்லாம் ரொம்ப ரொம்ப பக்கத்தில தான் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்குமோண்ணு தோணுது.

இத கொஞ்சம் பாருங்க சும்மா சுத்தி சுத்தி வருதில்லே
http://www.clublaugh.com/es-items/712.swf

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
//வானத்தை வெள்ளை பெயின்ட் அடித்த கூரையாகவே கருதியிருந்தேன். நட்சத்திரங்கள் கூரையிலுள்ள ஓட்டைகளாகவும், நிலவை பெரிய குண்டு பல்ப் என்பதாகவும் தான் எண்னியிருந்தேன்.//

வருணனை அழகா இருக்கு
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
// ஆட்டோக்கரர்கள் அடுத்த தெரு செல்ல சென்ன முழுதும் சுற்றுவார்களே அது தான் விஞ்ஞானம்.//

கரெக்டா சொன்னீங்க ...நான் நிறைய ஏமாந்து இருக்கேன் இதுபோல
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
அறிவியலும், வர்ணனையும் ,பாட்டி கதையும் கலந்து ,mixed juice சாப்பிட மாதிரி இருக்கு.
நன்றாக உள்ளது.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ராஜேஸ்வரி உங்க பின்னூட்டமும் ஃப்ரெஸ் ஜூஸ் சாப்பிட்ட மாதிரி புத்துணர்வு தருது.குறை இருந்தாலும் சொல்வீங்க தானே?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உருண்டையின் வெளிப்புறம் எல்லாப் பக்கத்திலும் மனிதர்கள் இருக்கிறர்கள் என்று அறிந்த போது, கீழே உள்ள மனிதர்கள் ஏன் விழாமல் இருக்கிறார்கள்? கட்டிடங்கள் ஏன் விழவில்லை. கடல் நீர் ஏன் கொட்டிப் போக வில்லை? -மீண்டும் கேள்விகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு தத்துவம் எல்லோரையும் பூமியோடு ஈர்த்து காப்பாற்றியது.
:) Real happenings
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வானத்தை வெள்ளை பெயின்ட் அடித்த கூரையாகவே கருதியிருந்தேன். //அருமை இதேதான் தோன்றியது.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ungaludaiya bathiu miga arumai thanku.but ariu ullathuku thalivana oru mutivai tharum .kulapathai eppatii tharum