குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

  • உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
  • கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
  • சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
  • தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
  • குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
  • மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
  • குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
  • சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
  • குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
  • குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
  • கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
  • கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
  • ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
  • தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
  • சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
  • கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
  • பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
  • வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
  • மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
  • மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
  • இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
  • சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
  • சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
  • ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.
  • சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.
  • வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
  • கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
  • தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
  • சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
  • ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
  • கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
  • எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.
  • வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.
  • குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
  • குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
  • தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
  • வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
  • குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
  • துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
  • தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
  • குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.
  • குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
  • நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
  • வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
  • விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

கருத்துகள்

Jaleela Kamal இவ்வாறு கூறியுள்ளார்…
பெற்றோர்களின் கவனத்திற்கு http://samaiyalattakaasam.blogspot.com/2011/01/blog-post_1102.html

கண்டிப்பாக இந்த் பதிவு எல்லோருக்கும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு
தங்கராசு நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
சின்ன சின்ன விசயமா மிக நுனுக்கமா சொல்லியிருக்கிங்க மிக்க பாராட்டுக்கள் நிச்சயம் இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்
சசிக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு!!!
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
சமயலறையில் பேண வேண்டிய ஒழுங்குகள்.
1) "கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே, சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது.
02.) "சமயலறையில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடையானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும். 03.)சமயலறையில் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன"
04) "கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்' ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது".
05.) "குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்" "குழப்பமான மனநிலையில் சமயலறையில் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்' செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்"
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
மின்சாரம்... எச்சரிக்கை... டிப்ஸ்...

மூன்று பின்கள் உள்ள பிளக்-ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

பிளக்கில் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்நை வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.

ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.

முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..) தனித் தனியாக ‘எர்த் கனெக்ஷன்’ கொடுப்பது பாதுகாப்பானது.

வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி ‘பின்’களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல ‘பிளக்’குகளை செருகிவைக்கக் கூடாது.
தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.

கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.

கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே ‘ஆன்’ ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’

மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர்,மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும்.

மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.

மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.

ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்